Tuesday, April 15, 2008

ஒரு டுவிஸ்ட்

கோவாவின் பனாஜி பஸ் நிலையம். பனாஜியில் இருந்து மட்கான் போவதற்காக பயணிகள் டிக்கெட் கவுண்ட்டரில் க்யூவில் நின்று கொண்டு இருக்கின்றனர்.க்யூ மிகவும் நீளமானதாக வளைந்து நெளிந்து இருந்தது.பயணிகள் வெகு நேரம் பஸ் வராததால் பொறுமையிழந்து கொண்டு இருந்தனர்.சில பயணிகள் கவுண்ட்டரில் போய் விசாரித்து விட்டு வந்தனர். அந்த நேரம் ஒரு கல்லூரி மாண்வனைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவன் நிதானமாக நடந்து வந்து நீளமான க்யூவைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்தான். அதே சமயம் தூரத்தில் பஸ் வருவது தெரிந்ததும் பாதி க்யூவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெரியவரின் முன்பாக போய் இடித்துக் கொண்டு அந்த இளைஞன் நின்று கொண்டான். பெரியவர் அவன் தோளைத் தட்டி தம்பி க்யூவில் பின்னால் போய் நின்று கொண்டு எல்லோரையும் போல டிக்கெட் எடுத்து பஸ்ஸில் ஏறு என்றார். அவன் அந்தப் பெரியவர் வேறு யாரிடமோ சொல்வது போல கேட்டும் கேட்காதது மாதிரி நின்று கொண்டு இருந்தான். மீண்டும் பெரியவர் அவனுடைய தோள்பட்டையைத் தட்டி நான் சொல்வது உன் காதில் விழவில்லையா நான் உன்னிடம் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். பின்னால் போய் நில் என்றார். அதற்கு அந்த வாலிபன், பெருசு, நான் இங்க நின்னா உனக்கு என்ன, குடியா முழுகிடும். எனக்கு அவசரமா போகணும். இந்த பஸ்ஸில நீயும் கண்டிப்பா ஏறாலாம். கொஞ்ச நேரம் பேசாம இரு என்று சொல்லி விட்டு பெரியவரையே முறைத்தான். பெரியவருக்கு சுரீர் என்று கோபம் வந்தது அவர் முகத்தில் தெரிந்தது. பெரியவர் அந்த இளைஞன் கையைப் பிடித்து இழுத்து அவனை க்யூவிற்கு வெளியில் தள்ளினார். இதை சற்றும் எதிர்பாராத இளைஞன் கோபம் தலைக்கேற தன் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை உருவ ஆரம்பித்தான். இதையனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்த பயணிகள் அடுத்து என்ன நடக்கப் போகுமோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த இளைஞன் பெல்ட்டை ஓங்கி பெரியவரின் மீது ஒரு விளாசு விளாச பெரியவர் அந்த பெல்ட்டை தன் வலது கையால் இறுகப் பற்றி தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அவனிடமிருந்து பிடுங்கி விட்டார். அந்த இளைஞன் இதை சற்றும் எதிர்பாராததால் பெரியவரை அடிக்க கையை ஓங்கிய வேளையில் பெரியவரின் கையில் இருந்த பெல்ட் அவனுடைய உடம்பில் விளையட ஆரம்பித்தது. அந்த இளைஞனை கதறக் கதற ஏழெட்டு அடிகள் அடித்து விட்டு அவனை கீழே தள்ளி விடவும் போலீஸ் அங்கு வரவும் சரியாக இருந்தது. நடந்த விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்ட போலீஸார் அந்த இளஞனை நெட்டித் தள்ளிக் கொண்டு போனார்கள். க்யூவில் இருந்தவர்கள் அனைவரும் பெரியவரைப் பார்த்து அவனுக்கு நன்றாக பாடம் புகட்டீனீர்கள் என்று பாராட்டினர். இதிலிருந்து அறியப்படுவது என்னவென்றால் நாம் நமக்கு உதவும் என்று இடுப்பில் கட்டிக் கொள்ளும் பெல்ட் நமக்கே வினையாய் வந்து முடியலாம் என்பதே.

2 comments:

Divya said...

பெரியவரின் துணிச்சலும், பதிலடியும் பாராட்டத்தக்கதே!!

உங்கள் எழுத்தின் நடை படிக்க சுவாரஸியமாக இருக்கிறது,
எனினும்.....சிறு சிறு பாராக்களாக[ paragraph] எழுதினால் , படிக்க இன்னும் நல்லாயிருக்கும்!

Nimal said...

இன்றுதான் நான் முதலில் உங்கள் பதிவுக்கு வந்தேன். வித்தியாசம் இருக்கிறது.

தொடருங்கள் சிறப்பாக... வாழ்த்துக்கள்...!